சிறுகதை: தண்டனை


ஒரு மன்னர் இருந்தார். அவருக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் முக்கியம். அதனாலே தனக்கு அறிவுரை கூற நிறைய மந்திரிகளை நியமித்திருந்தார். அவர்களில் தலைச்சிறந்த ஒரு அறிவாளியை முதன்மந்திரியாக நியமித்திருந்தார். 

ஒரு நாள் சபையினில்....  

இரு காவலாளிகள், ஒரு திருடனை சங்கிலியால் பினைத்து இழுத்து வந்து, மன்னர் முன் நிறுத்தினர். ரொம்ப நாளாகவே தொல்லைக் கொடுத்த திருடன் அவன்.  

‘ம்ம்..இவனை என்ன பண்ணலாம்’ என்று மன்னர் கேட்டார். 

’தூக்கிலிடுங்கள்’ என்று அனைவரும் கூறினர். 

ஆனால் முதன்மந்திரி மட்டும் அமைதியாக இருந்தார். 

மன்னர் அவரைப் பார்த்துக் கேட்டார் ‘என்ன முதன் மந்திரியாரே! ஏன் அமைதியாய் இருக்கின்றீர்கள். இவனை தூக்கிலிடலாமா?’ 

’அதாவது, திருடினால் அதற்கு தண்டனை தூக்கு? அப்படியா மன்னா?’ என்று அமைதியாய் கேட்டார் முதன்மந்திரி. 

’ஆமாம். இதில் என்ன தப்பு? என் ஆட்சியில் இனிமேல் “திருடினால் தூக்கு”. சட்டம் இயற்றவா?’ என்று கேட்டார் மன்னர். 

‘இல்லை மன்னா, திருடினால் தூக்கு என்று பொத்தாம் பொதுவாக சட்டம் போடுவது அவ்வளவு சரியாகப்படவில்லை. எல்லா திருட்டும் ஒன்றல்ல’.  

‘என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே?’ 

‘மன்னா, ஒரு ஏழைச்சிறுவன் வயிற்றுப் பசிக்காக ஒரு கடையில் இருந்து இரண்டு மரவள்ளி கிழங்கை திருடித்தின்று விடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கும் உங்கள் சட்டப்படி தூக்கு தண்டனை கொடுப்பீர்களா?’ 

மன்னர் யோசித்தார். பிறகு சொன்னார், ’மிகச்சரியாக கேட்டீர்கள் மந்திரியாரே. அந்தச் சிறுவனை திருத்த முயற்சிப்பேனே தவிர தூக்குதண்டனை தரமாட்டேன். இப்போது எனக்கு புரிந்தது. எல்லாத் திருட்டும் ஒன்றல்ல’. மேலும் சபையைப் பார்த்து உரத்த குரலில்  ‘இந்த திருடனை அழைத்துச் சென்று நன்றாக விசாரித்துவிட்டு அதற்கேற்ற தண்டனை கொடுங்கள்’ என்று சொன்னார்.

காவலாளிகள் அந்த திருடனை அழைத்துச் சென்றனர். 

பிறகு இன்னொருவனை இழுத்துவந்து நிறுத்தினர். 

‘மன்னா. இவன் ஒரு கொலைகாரன். நேற்று கடைத்தெருவில் ஒருவனை இவன் ஓட ஓட விரட்டிக்கொன்றுவிட்டான்’ 

மன்னர் அவனைப் பார்த்தார். பிறகு தனது மந்திரிகளை நோக்கி ‘இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?’ என்று கேட்டார். 

அனைவரும் ஆவேசமாக ‘இவனைத் தூக்கிலிடுங்கள் மன்னா?’ என்று கத்தினர். 

மன்னர் மெல்ல முதன்மந்திரியைப் பார்த்தார். முதன்மந்திரி அமைதியாக இருந்தார். 

’என்ன சொல்கிறீர்கள் முதன்மந்திரியாரே? கொலை என்பது எக்காலத்திலும் ஒரு மாபாதகச் செயல். அதற்கு நீங்கள் வக்காலத்து வாங்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஆதலால் கொலை செய்தால் தூக்கு தண்டனை என்பதே என் முடிவு. என்ன சொல்கிறீர்கள்’ என்றார் மன்னர். 

அனைவரும் முதன்மந்திரியாரை ஆவலுடன் பார்த்தார்கள். 

முதன்மந்திரி மெல்ல எழுந்து ‘மன்னா, எல்லா கொலையும் ஒன்றல்ல’ என்றார். 

சபையினில் ‘ஆ!..என்ன..’ என்று பலத்த முணுமுணுப்பு எழுந்தது. ‘இந்த ஆளுக்கு வயதாகிவிட்டது’ என்று கூட ஒரு முணுமுணுப்பு குரல் கேட்டது. மன்னர் முகத்திலும் கொஞ்சம் கடுமை இருந்தது.  

‘என்ன சொல்கிறீர்கள் முதன்மந்திரியாரே? கொலை என்பது எக்காலத்திலும் ஒரு மாபெருங் குற்றமாகும். இதை மறுக்கிறீர்களா?’ என்று உறுமினார் மன்னர். 

‘ஆமாம். மறுக்கிறேன் மன்னா’, அமைதியாக ஆனால் உறுதியாக சொன்னார் முதன்மந்திரி. 

இப்பொது சபையில் பலத்த முணுமுனுப்பு கேட்டது. சிலர் அதிர்ச்சியால் ‘ச்சே’ என்று, சபையென்றும் பாராமல் கத்திவிட்டனர். 

‘விளக்குங்கள். முதன்மந்திரியாரே?’, கர்ஜித்தார் மன்னர். 

’ஒரு நல்லவன் இருக்கின்றான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனைக் கொல்ல ஒரு கெட்டவன் வந்து அவனைத் தாக்குகின்றான். தன்னைக் காத்துக்கொள்ள அந்த நல்லவன் போராடுகிறான். அந்தப் போராட்டத்தில், நல்லவன் அந்த கெட்டவனைக் கொன்று விடுகிறான். அதாவது தற்காப்புக்காக அவன் கொலை செய்துவிடுகிறான். அவனுக்கு உங்கள் சட்டபடி தூக்குதண்டனை கொடுப்பீர்களா?’ 

இப்போதும் சபையிலிருந்து முணுமுணுப்பு கேட்டது. ஆனால் வேறு விதமாக. ‘பலே..! சரியான கேள்விதான்’ என்று சபையிலிருந்து சன்னமாக கேட்டது. 

ஆனாலும் மன்னர் விட்டுக் கொடுப்பதாக இல்லை. ‘சரி, தற்காப்புக்காக கொலை செய்வதை தவிர மற்ற கொலைகளுக்கு தூக்குதண்டனை என்கிறேன் நான். நீங்கள் இதற்கு ஒத்துக்கொள்கிறீர்களா?’ 

‘இல்லை மன்னா. அப்படியானால், ஒரு போரினில் நம் நாட்டு படை வீரர்கள் எதிரிகளை கொல்கிறார்களே. அந்தக் கொலைகளுக்கு துக்கு தண்டனை கொடுப்பீர்களா?’ 

இப்போது மன்னருக்கு சுரத்து இறங்கிவிட்டது. யோசித்து பிறகு சொன்னார், ‘என்னை மன்னித்து விடுங்கள் முதன்மந்திரியாரே. நான் சற்று ஆவசப்பட்டுவிட்டேன். எல்லாக் கொலைகளும் ஒன்றல்ல. ஒத்துக்கொள்கிறேன்’. பிறகு தலைமைக் காவலாளியைப் பார்த்துச் சொன்னார், ‘ இவனையும் அழைத்துச் சென்று தீர விசாரித்து அதற்கேற்ற தண்டனை கொடுங்கள். மேலும் இவன் மேல் குறறம் இருந்தால், இவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவும் தயங்காதீர்கள்’ என்று சொன்னார். 

அவனை காவலாளிகள் அழைத்துச் சென்றனர்.  

இப்பொழுது இன்னொருவனை அழைத்து வந்தனர். 

’இவன் செய்த குற்றம் என்ன?’ மன்னர் வினவினார். 

‘மன்னா, இவன் ஒரு பெண்ணை பலவந்தமாக தாக்கி பலாத்காரம் செய்துவிட்டான். சில நாள் முன்பு, இருளில் தனது தம்பியோடு நடந்து வந்துக்கொண்டிருந்த அந்த பெண்ணிடம் இவன் போய் வம்பிழுத்திருக்கின்றான். தடுத்தக்கேட்ட அவள் தம்பியைத் தாக்கி மயக்கமுறச்செய்துவிட்டு, அந்தப் பெண்ணையும் பலமாகத் தாக்கி, பிறகு அவளை பலமுறை பலாத்காரம் செய்தான். அப்படி செய்துக்கொண்டிந்த போது அங்கு வந்த வழிப்போக்கர்கள் இந்த கொடும் செயலை கண்டு இவனை தாக்கி அந்தப் பெண்ணை காப்பாற்றியிருக்கின்றனர். அந்தப் பெண் இப்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கின்றாள். இவனுக்கு கடும் தண்டனை அளியுங்கள் மன்னா’ என்றனர். 

மன்னர் எதுவும் சொல்லவில்லை. அதற்கு மாறாக முதன்மந்திரியையே பார்த்தார்.  

’முதன்மந்திரியாரே, இதை நீங்கள் எவ்வாறு கையாளுவீர்கள்?’ என்று கேட்டார் மன்னர்.  அனைவரும் முதன்மந்திரியை பார்த்தனர். 

முதன்மந்திரி மெதுவாக எழுந்து காவலாளிகள் அருகில் வந்தார். ‘இவன் மேல் கூறபட்ட இந்த குற்றம் ஊர்ஜிதமாகிவிட்டதா?’ 

‘ஆமாம் முதன்மந்திரியாரே. இந்த கொடும் செயலை இவன் செய்துகொண்டிருக்கும் போது பார்த்த வழிப்போக்கர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து முறையாக சாட்சியங்களும் வாக்குமூலங்களும் பெற்றாகிவிட்டாயிற்று. மேலும் இவனே தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்ட்டான்’ 

‘அப்படியா’ என்றார் முதன்மந்திரி. பிறகு அந்த குற்றவாளியிடம் சென்று, ‘நீ அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தது உண்மையா?’ என்றார். 

‘ஆமாம் அய்யா. குடிபோதையில் இருந்ததால் அப்படி செய்துவிட்டேன். என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் அய்யா’ என்றான். 

அப்படி அவன் சொல்லி முடித்த அடுத்த வினாடியில் அவன் நெஞ்சினில் கூரிய வாள் பாய்ந்தது. 

‘ஆ’ என்று அலறிக்கொண்டே கீழே விழுந்தான் அவன். 

சபையினர் அதிர்ந்துப் போய் நின்றனர். மன்னரும் அதிர்ந்துப்போனார். 

ஏனென்றால் முதன்மந்திரிதான் அந்த வாளைப் பாய்ச்சியவர். இவ்வளவு வயதிலும், மின்னல் வேகத்தில் தன் உறையில் இருந்து அவர் தனது வாளை உறுவியவர், உறுவிய வேகத்திலேயே அந்தக் கயவனின் நெஞ்சினில் அதைப் பாய்ச்சி விட்டிருந்தார். 

அவன் கீழே விழுந்து துடிதுடித்துக்கொண்டிருந்தான். ரத்தம் பீரிட்டுக்கொண்டு வெளியே வந்துக் கொண்டிருந்தது. 

ஒரு வேகத்தில் அரண்மனை தலைமை மருத்துவர் அந்தக் கயவனை நோக்கிவர முற்பட்டார். 

‘யாரும், இவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இவன் அருகே வரக்கூடாது’ என்று முதன்மந்திரி கர்ஜித்தார். 

தலைமை மருத்துவர் அங்கேயே நின்று விட்டார். 

முதன்மந்திரி பிறகு மன்னரைப் பார்த்து அமைதியாக ஆனால் தீர்க்கமாக பேசினார். 

‘மன்னா. எல்லாத் திருட்டும் ஒன்றல்ல. எல்லா கொலையும் ஒன்றல்ல. நான் ஏற்கெனவே கூறிய எடுத்துக்காட்டுச் சூழ்நிலைகளை கூறி ஒரு திருட்டை நியாயப் படுத்தமுடியும், ஒரு கொலையைக் கூட நியாயப் படுத்த முடியும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நியாயமே படுத்த முடியாத குற்றம் ஒன்று உண்டு எனில் அது ‘பாலியல் பலாத்காரம்’தான். தனது சகோதரியை ஒருவன் பலாத்காரம் செய்தான் என்றால் கூட, பதிலுக்கு அவன் சகோதரியை இவன் பலாத்காரம் செய்ய முடியாது. வேண்டுமானால் அவனை இவன் கொல்லலாம். ஆனால் பலாத்காரத்தை எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆதலால் எந்த பலாத்காரத்திற்கும் தண்டனை மரணம் தான். இல்லை, உங்களில் யாரேனும், பலாத்காரத்தை நியாய படுத்த ஒரு, ஒரேயொரு, காரணத்தைக் கூறமுடியுமானால், இங்கு வந்து நின்று கூறிவிட்டு, இதோ, கீழே விழுந்து துடித்துக்கொண்டிருக்கும் இந்தக் கயவனை காப்பாற்றுங்கள். கூடவே நானும் இக்கணமே, இதே வாளை என் நெஞ்சினில் பாய்த்துக்கொண்டு உயிரை விட்டுவிடுகின்றேன். இல்லையென்றால், இந்தக் கயவன் மரணம் அடையப்போவதை யாரும் தடுக்காதீர்கள். ஆமாம், பலாத்காரத்துக்கு என்றுமே மரணம்தான் தீர்ப்பு’ என்று நின்றுக்கொண்டிருக்கிறார்.

பின்குறிப்பு: உங்களில் யாருக்கேனும் பலாத்காரத்தை நியாயப்படுத்த முடியும் என்று தோன்றினால், உங்கள் வாதத்தை வையுங்கள். முதன்மந்திரி இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறார்.

பின் பின்குறிப்பு: இதைப் படிக்கும் இளைய தலைமுறையை சார்ந்தவர்களே, நாளைய ஆட்சி உங்களிடம். ஒரு முடிவெடுங்கள்.

By
Sampath

Comments